0

LZFBHOb.png



கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பலரது ஒருமித்த பதிலாக உள்ளது.அதே எதிர்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. உற்பத்தி துறைக்கும், தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால் அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் படித்து முடித்து வேலை தேடும் பட்டதாரிகளிடம் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...



* பாசிட்டிவ் எனர்ஜி:


எந்தவொரு நிறுவனமும் நேர்காணலில் 'ஆடிட்யூட்டுக்கு' அதிக முக்கியத்துவம் தருகின்றன. எந்தளவுக்கு நிறுவனத்திற்கு பாசிட்டிவ் ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள். உதாரணமாக வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத் தயாரா என்று கேட்கப்படலாம். அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம். உண்மையில் பெங்களூரில் ஆட்கள் தேவைப்படலாம். 

அப்போது ' நான் சென்னையில் மட்டும் தான் வேலை செய்வேன்' என்று கூறும் பட்சத்தில் அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக் கொள்கிறார். அதே நபரிடம் வெளிநாடுகளில் வேலை செய்ய தயாரா? கேட்டால் உடனடியாக தயார் என்று சொல்லக்கூடும். இதைத்தான் ஆங்கிலத்தில் 'குளோபலி பிளக்சிபில் லோக்கலி இம்மொபைல் என்று சொல்வார்கள்.




* நிலைத்து நிற்பாரா?
 

ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு, பெரும்பாலானோர் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அரசுத் துறைகளில் இந்த நிலை மிக அதிகம் என்றாலும் தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படி சராசரியாக 5 முதல் 8 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது.

அதே தற்போதைய ஆய்வின்படி ஒருவர் 2 முதல் 3 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறது. எனவே, குறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும். நிரந்தரமாக வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன.




* துறை சார்ந்த அறிவு:
 

கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும் அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதா? என்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளி கல்வியில் முடியும். ஆனால், கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே தேர்வாகினாலும் எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும், புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை. செயல்முறைத்திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும்.




* தீர்வு காணும் திறன்:


பொறியியல் சிவில், மெக்கானிக்கல், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும் சிறந்த ' ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்' 'லாஜிக்கல் அண்ட் அனலயிட்டிக்கல் திங்கிங்' திறன்களை நிறுவனங்கள் கட்டாயம் எதிர்பார்க்கின்றன. நேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்து முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதா? என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் நமது சமயோசித அறிவும், திறமையும் இணைந்த செயல்பட்டால் நம்மால் அந்த நேர்முகத்தேர்வை எளிதில் வெற்றி பெற முடியும்.



* குழுவாக செயல்படும் திறன்:


மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. 'மாணவிகளிடம் பேசக்கூடாது' என்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளன.ஆனால், பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம். 'தனிமனிதனாக வெற்றி பெற்று விட்டேன் அனால், குழு தோற்று விட்டது' என்றாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காது. எனவே, குழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா? அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதா? என்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும்.




* தொடர் கற்றல்:


ஒரு மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்து கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார். எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல், நவீன அறிவு ஆகியவை அவசியம். இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும்.



* தகவல் தொடர்பு திறன்:
 

இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் 'கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்' அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும் அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத்திறமை அவசியம். தகவல் தொடர்பில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top