0
qYxqycZ.jpg


சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம். அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும்  இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.  நல்ல எனர்ஜியை கொடுக்க கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா விளங்குகிறது. ஒரு  வாழை பழத்திலே, ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கிலே காணப்படக் கூடியதற்கு இணையான சத்து சப்போட்டாவிலும்  காணப்படுகிறது. 100 கிராம் சப்போட்டாவிலே 83 கிராம் கலோரி சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின்கள், தாது பொருட்கள்,  அமினோ அமிலங்கள் இவற்றுடன் ஆல்கலாய்டுகளையும் சப்போட்டா பெற்றிருக்கிறது. 

இனிப்பு சூயிங்கம் இதில் இருந்தும் தயார் செய்யப்படுகிறது. ரத்த ஓட்டத்தை விருத்தி செய்வதாகவும், வயிற்று போக்கை தடுக்கக்  கூடியதாகவும் சப்போட்டா விளங்குகிறது.சப்போட்டா பழத்தை ஒரு உணவு பொருள் என்றுதான் இதுநாள் வரை  பெரும்பாலானோர் கருதி வருகின்றனர். சப்போட்டா பழத்தில் டேனிப் என்று சொல்லக் கூடிய வேதிப் பொருள் அதிகம்  காணப்படுகிறது. இது நோய் தடுப்பு பொருளாக செயல்படுகிறது. உடலில் புற்று நோய்களை உருவாக்கக் கூடிய நச்சு கழிவுகளை  நீக்கக் கூடியதாகவும் இது விளங்குகிறது. மேலும் நோய் கிருமிகளை உடலை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும் சப்போட்டா  பழத்திற்கு உள்ளது.

மேலும் சப்போட்டா மரத்தின் இலைகள், பிஞ்சு போன்றவையும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். எனவே இவற்றை  கொண்டு வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்து ஒன்றை இப்போது தயார் செய்யலாம். இதற்கு தேவையான  பொருட்கள் சப்போட்டா இலைகள், சுக்கு பொடி, மிளகு பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்  கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றில் 5 முதல் 6 எண்ணிக்கையிலான சப்போட்டா இலைகளை சேர்க்க  வேண்டும். இவற்றை சிறிது சிறிதாக வெட்டி கொதிக்க வைத்த தண்ணீரில் இட வேண்டும். 

இதனுடன் சிறிதளவு சுக்கு பொடி, சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். பின்னர் மீண்டும் சப்போட்டா இலைகள் வேகும்  வரை தண்ணீரை கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் பருகி  வருவதால் மூட்டு வலி, உடல் வலி, அல்சர் போன்றவை விலகும். சப்போட்டாவின் விதைகள் தலையில் பொடுகை  கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன.

சப்போட்டா விதைகள், நல்லெண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி பொடுகை கட்டுப்படுத்தும் தைலம் ஒன்றை தயாரிக்கலாம்.  சப்போட்டா பழத்திற்குள் இருக்கும் விதைகளை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணையை  வாணலியில் சிறிதளவு எடுத்து காய்ச்ச வேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ள சப்போட்டா  விதைகளை சேர்க்க வேண்டும். 

சப்போட்டா விதைகள் ஈரம் உள்ளவையாக இருக்கும் என்பதால் அதை அப்படியே எண்ணெயில் போட முடியாது.  எனவே  அதற்கு முன்னதாக அதை சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்து உலர் தன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்  இவற்றை பொடி செய்வதோ, நேரடியாக எண்ணெயில் சேர்ப்பதோ எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தற்போது  சப்போட்டா விதை பொடியுடன் நன்றாக காய்ச்சிய நல்லெண்ைணயை எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.

தலை குளிப்பதற்கு முன்னதாக இந்த தைலத்தை தலையில் நன்றாக தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் வைத்திருந்து விட்டு குளிக்க  வேண்டும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள  பேன், பொடுகு உள்ளிட்டவற்றின் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவ்வாறு சப்போட்டாவின் பழம் மட்டுமின்றி அதன்  இலைகள், விதைகள் கூட மருத்துவ குணங்கள் கொண்டதாக விளங்குவதை நாம் பார்க்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top