0
cancer1.jpg
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.


‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் என்பது என்ன? நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போதுதான் புற்றுசெல்கள் பல்கிப் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை நாம் தடுக்க முடியும், தவிர்க்க முடியும். புற்றுநோயைத் தடுக்க நாம் பெரிதாகச் செலவுசெய்து, மாத்திரை மருந்துகள் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்வியல்முறை மாற்றம் மூலமாகவே பெரும்பாலான புற்றுநோய்களைத் தடுத்துவிட முடியும்.

  
புற்றுநோயை வெல்ல 10 வழிகள் 


1.உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். 

2. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத ஆர்கானிக் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. 


3.மாசு நிறைந்த சுற்றுச்சூழலைத் தவிர்த்து, தூய்மையான இடங்களில் வசிப்பது நல்லது.


4.புகைபிடிக்கவும் கூடாது; புகைபிடிப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது. 


5.மது, மோசமான அரக்கன். மதுவைத் தவிர்த்தாலே, கல்லீரல் புற்றுநோய் வருவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும். 

6.உடல் உழைப்பு அவசியம். அளவான உடற்பயிற்சியை தினமும் சீராகச் செய்ய வேண்டும். 

7.எண்ணெயில் வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் எண்ணெயைச் சூடுபடுத்தக் கூடாது.

8.கதிர்வீச்சு நிறைந்த பகுதிகளில் வசிப்பதையோ, கதிர்வீச்சு நிறைந்த அறையில் வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும். 

9. தவறான உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் ஹுயுமன் பேப்பிலோமா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். ஹெபடைடிஸ் பி வைரஸ் தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். 

10.வெயில் காலங்களில் பல மணி நேரம் சூரிய ஒளி உடலில்படுமாறு நிற்பதையோ, வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும். 



image_Anti_cancer.jpg


மூன்றில் ஒரு புற்றுநோயாளிக்கு, புற்றுநோய் வருவதற்கு ஐந்து முக்கியமான காரணங்கள் உள்ளன. அவை... *உடல் பருமன். *காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது. *உடல் உழைப்பு இன்மை. *புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல். *மது அருந்துதல். இந்த ஐந்து விஷயங்களையும் தவிர்த்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை 30 சதவிகிதம் வரை குறைக்க முடியும். உலகம் முழுவதும் மரணிப்பவர்களில் 100-ல், 13 பேர் புற்றுநோய் காரணமாகவே இறக்கின்றனர். 


2012- ம் ஆண்டு கணக்குப்படி, ஒவ்வோர் ஆண்டும் மோசமான முதல் 5 புற்றுநோய்களால் மரணமடைபவர்களின் புள்ளிவிவரம்: உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் புதிதாக 1.41 கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை - 80.2 லட்சம். 30 - 69 வயதில் புற்றுநோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம். அடுத்த 20 வருடங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட இருப்பவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு ஐந்து விதமான புற்றுநோய்களும், பெண்களுக்கு ஐந்துவிதமான புற்றுநோய்களும் பெருமளவு காணப்படுகின்றன. உலகம் முழுவதும் புற்றுநோயால் மரணம் அடைபவர்களில் 20 சதவிகிதம் பேர் நுரையீரல் புற்றுநோய் வந்தவர்கள். நுரையீரல் புற்றுநோய் வருபவர்களில் 70 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர்.*

கருத்துரையிடுக Disqus

 
Top