பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை. தமிழ் புத்தாண்டு, மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இது குறித்து புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. மேற்கண்ட தொலைபேசி எண் மூலம், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும்போது அதிகக் கட்டணம் வசூலித்தல் சம்பந்தமான குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
மேற்படி புகார் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்படும். அனைத்து பொதுமக்களும் தங்களது புகார் மீதான உரிய நடவடிக்கைக்கு மேற்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக