எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்
இந்தியா மேப்
வரைந்துகொண்டிருந்தார். அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வர்ணம் அடிக்க வேண்டும். எப்படிப் பிரிப்பது என்று கேட்டார்.
“மொத்த நீளம் எவ்வளவு என்று அள” என்றேன்.
“30 CM”
“30 CM-ல் பாதி எவ்வளவு?”
திரு திருவென முழித்து “20 CM”
“நல்லா யோசிச்சு சொல்லு”
“8 CM அண்ணா” என்றது.
நீயே அதை வரைந்துகொள் என்று கிளம்பிவிட்டேன்.
இத்தனைக்கும் அந்தச்சிறுமி பள்ளியில் 4-வது ரேங். 120 பேர் படிக்கும்
எட்டாம் வகுப்பில் 4-வது ரேங் எடுத்த
ஒருவருக்கு 30ல் பாதி எவ்வளவு
என்று தெரியவில்லை என்றால் மற்ற 116 பேரின் நிலைமை? எந்திரம் போல் புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து பரீட்சைத் தாளில் கிறுக்கி
மார்க் வாங்குவதே கல்வியா?
டியுசன் என்றொரு வைரஸ். LKG, UKG படிக்கும் குழந்தைகளை எல்லாம் டியுசன் அனுப்புவது இந்தியாவில் மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
ஸ்பெஷல் கிளாஸ் என்றொரு இன்னொரு வைரஸ். வருடம் முழுவதும்
சனிக்கிழமை என்பது இப்போது அறிவிக்கப்படாத பள்ளி செயல்படும் தினம். வாரத்தின் 5 நாட்களில் சொல்லித்தர முடியாத ஒன்றையா அந்த ஒரு நாளில் சொல்லித்தரப்
போகிறார்கள்?
10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு
படிப்போரின் நிலைமையோ இன்னும் மோசம். என்னவோ ராணுவ போருக்குப் போவதுபோலவே
நடத்தப்படுகிறார்கள். 9,11ம் வகுப்பு
முடிந்த உடனே கிடைக்கும் இரண்டுமாத விடுமுறை எல்லாம் கிடையவே கிடையாது. காலை
ஏழுமணி முதல் இரவு ஒன்பது மணிவரை படிக்கும் எந்திரங்களாகவே
நடத்தப்படுகிறார்கள். இன்னும் சில தனியார் பள்ளிகளில் 9,11ம் வகுப்பு பாடங்களே கிடையாது. அதற்கு பதிலாக 10,12 பாட
புத்தகங்களையே கொடுத்து படிக்க வைக்கின்றனர்.
புற்றீசல் போல ஊரெல்லாம் முளைத்திருக்கும் தனியார் பள்ளிகள்
2000, 3000 சம்பளத்திற்கு அனுபவமே இல்லாத 10ம் வகுப்பு படித்தவரை எல்லாம் “மிஸ்” என பாடம் நடுத்தவிடுவதுதான் கொடுமையிலும் கொடுமை. தனியார் பள்ளியில் படிப்பதை
கௌரவமாய் நினைப்போர் இருக்கும்வரை இது மாறாது.
கல்வியை முற்றிலும் வியாபாரமாக்கிவிட்டதுடன் அது வெறும்
பட்டங்களை மட்டுமே தருகிறது. அறிவை அல்ல. கல்வி கற்போர் எந்திரங்களாய்
கற்கிறார்களே தவிர எதற்காகக் கல்வி கற்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல்.
கல்வி என்பது
வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கான ஒரு வழியே தவிர வாழ்க்கை
அல்ல. நம் சந்ததிகளுக்கு சரியான கல்வி அறிவைத் தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, வெறும் பட்டங்களை அல்ல.