0



ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.

ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.

அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

அதுதான் 49 ஓ.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.

ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது ‘இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது’ என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி – 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

ஓ’ போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

மக்கள் கருத்து:
49 ஓ வை வாக்கு பதிவு இயந்திரத்தில் ஒரு பட்டனாக வைத்தால் நம்மில் அநேகர் அதை தான் பயன்படுத்துவார்கள்.... 50 % மேலான வாக்குகள் 49 ஓ ல் மட்டுமே விழும்.... அதற்காகவே அதை பயன்படுத்துவதை எட்டாத உயரத்தில் வைத்துள்ளது.

வேட்பாளர்களில் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ளவே இயலாது. நம்பில் அநேகருக்கு சுயேட்சையாக நிற்கும் வேட்பாளர்களை பற்றி தெரியவே தெரியாது. நாம் கண்டிப்பாக அவர்களை பற்றியும் தெரிந்து வைத்து இருந்தால் மட்டுமே 49 ஓ வை பயன்படுத்த வேண்டும்...


முதலில் நாம் பணம் வாங்கி ஓட்டு போடுதல், நமக்கு பிடித்தவர்களுக்கு மட்டும ஓட்டு போடுதல், ஒரே ஜாதி, பிடித்த கட்சி போன்றவற்றை ஓட்டு போதும் போது தவிர்த்து தகுதிவாய்த்த நபருக்கு ஓட்டு போடுதல் மிகவும் முக்கியம்.....

கருத்துரையிடுக Disqus

 
Top