0

துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை ஒட்ட வைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அதை சுமந்து நிற்கும் ராட்சத கிரேன் மூலம் தினமும் மக்கள் பணம் நான்கு லட்சம் ரூபாய் வீணாகிறது.

ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அச்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து, நடைபெற்று வரும் 117 கோடி ரூபாய் மதிப்பில் இரு மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலம் அமைக்கும் பணிக்காக, துவங்கிய அண்ணா பவள விழா நினைவு வளைவுகளை அகற்றும் பணியில், முறையான திட்டமிடல் இல்லாததால், ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பால பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், துண்டிக்கப்பட்ட ஒரு அண்ணா வளைவை ஒட்ட வைப்பதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் எப்போது முடிவுக்கு வந்து, ஒட்டும் பணிகள் துவங்கி, முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால், தினமும் மக்கள் பணம், நான்கு லட்சம் ரூபாய் வீணாகிறது என்று தெரிவிக்கிறார் அதிகாரி ஒருவர்.

இது குறித்து, அவர் தெரிவித்ததாவது:

துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை, இரவு பகல் பாராமல் சுமந்து நிற்கிறது 450 டன் எடையை தாங்கக்கூடிய ராட்சத கிரேன். 18 கோடி ரூபாய் மதிப்புள்ள இதன் ஒரு நாள் வாடகை, குறைந்தபட்சம் நான்கு லட்சம் ரூபாய். வளைவை அகற்ற துவங்கிய, கடந்த 1ம் தேதி இரவு முதல், வளைவை ஒட்ட முடிவெடுத்து இரண்டு நாட்கள் கடந்துள்ள இன்று வரை, அண்ணா வளைவை சுமந்திருக்கும் ராட்சத கிரேனின் வாடகை 32 லட்சம் ரூபாயை தாண்டி விட்டது. துண்டிக்கப்பட்ட வளைவை ஒட்டும் பணி முடிய தாமதமாகும் ஒவ்வொரு நாளும், மக்கள் பணம் நான்கு லட்சம் ரூபாய் வீணாகும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கருத்துரையிடுக Disqus

 
Top