கடந்த ஆகஸ்டில், சாம்சங் நிறுவனம் 1.051 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆப்பிள் தொழில்நுட்பத்தை சாம்சங் தமது தயாரிப்புகளில் காப்பி அடித்த காரணத்தால், விதிக்கப்பட்ட அபராதம் இது.
தற்போது புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ள ஆப்பிள், சாம்சங் தமது பெரும்பாலான தயாரிப்புகளில், ஆப்பிள் தொழில்நுட்பத்தை காப்பி அடித்திருப்பது தெரிய வந்ததால், அவை தொடர்பாக தாம் ஆராயும்வரை, சாம்சங்கின் அனைத்து தயாரிப்புகளையும் அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
சாம்சங்கின் ஒவ்வொரு தயாரிப்பின், ஒவ்வொரு மாடலாக தாம் ஆராய்ந்து வருவதாகவும், அந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்து, எந்தெந்த மாடல்களில் ஆப்பிள் தொழில்நுட்பம் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கும்வரை, சாம்சங்கின் அனைத்து தயாரிப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த தடையுடன், மேலதிகமாக 707 மில்லியன் டாலர் இழப்பீடும் கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமான ஒரு தீர்ப்பு அமெரிக்க நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கும் ஆப்பிளுக்கு சாதகமாக முடிந்தால், அத்துடன் சாம்சங் அமெரிக்காவில் பாய்விரித்து படுத்துவிடும்!