டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர் குப்தா. ஜனவரி மாதம், அலுவலகம் சென்று, இரவில், "பைக்'கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், பைக்கை நிறுத்தி இருந்தார்.அப்போது, அசுர வேகத்தில் பின்னால் வந்த கார், தேவேந்தர் குப்தா பைக் மீது மோதி, அவரை தூக்கி வீசியது. அந்த காரை, ருச்சி அகுஜா என்ற, பெண் ஓட்டி வந்தார். உடல் முழுக்க பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய குப்தாவை கண்டுகொள்ளாமல், அந்த பெண், காரை ஓட்டிச் சென்று விட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த குப்தா, படுகாயமடைய வைத்த ருச்சி அகுஜா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ருச்சி மீதான தண்டனை நிரூபிக்கப்படுமானால், அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு இருந்தது.

நேற்று முன்தினம், வழக்கு விசாரிக்கப்பட்டது.""ருச்சி செய்த குற்றத்திற்கு என்ன இழப்பீடு கோருகிறீர்கள்?'' என, நீதிபதி, பாதிக்கப்பட்ட தேவேந்தர் குப்தாவிடம் கேட்டார்.""என் மீது அவர் காரை மோதியது கூட தவறில்லை; நான் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, கண்டுகொள்ளாமல் சென்றது தான் எனக்கு தவறாக படுகிறது. இதற்காக அவரிடம் இருந்து பணம் எதையும் பெற விரும்பவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக, டில்லி குளிரில் அவதிப்படும் ஏழைகளில், 400 பேருக்கு, ருச்சி அகுஜா, கம்பளிகளை வழங்க வேண்டும்,'' என்றார்.

விசாரணைக்கு வந்திருந்த ருச்சி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த அனை வருக்கும், ஆச்சர்யமாக போனது. "இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறாரே' என, பலரும் வியந்தனர்.தேவேந்தரின் கோரிக்கையை, ருச்சி ஏற்கிறாரா, இல்லையா என்பதை, பிப்ரவரி 16ம் தேதி தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
 
Top