இப்பகுதி மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஆதிவாசி மக்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அக்கரை செலுத்துவதில்லை.
ஒருநாள் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட, தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் செல்லாக்காலனி மாணவர்கள் வராவிட்டால் பள்ளியே வெறிச்சோடி விடும். இதனை உணர்ந்த ஆசிரியர்கள் இருவரும், காலையில் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.
பள்ளியில் இருந்து டூ வீலரில் ஆதிவாசி காலனிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தங்கள் டூ வீலரில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். தினமும் காலையில் 4 முறை,மாலை 4 முறை என பள்ளிக்கும், ஆதிவாசி காலனிக்கும் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்துகின்றனர். ஆண்டு முழுவதும் இவர்களின் சேவை தொடர்கிறது. இதற்கு ஆகும் செலவுகளையும், சிரமத்தையும் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
ஆசிரியர் செல்லத்துரை கூறியதாவது: நாங்கள் அழைத்து வராவிட்டால் ஆதிவாசி மாணவர்கள், பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, நாங்கள் தினமும் இந்த இலவச சேவையை செய்து வருகிறோம்' என்றார்.