இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில், கொலை செய்யும் ரவுடிகளை பெண்கள் காதலிப்பது போன்ற காட்சிகள், அதிகமாக இடம் பெற்று வருகின்றன. பேன்ட், டீ சர்ட் அணிந்து, அழகுடன் உள்ள ஹீரோக்களாக காட்டிய காலம் போய், டவுசர் தெரியும் கைலியுடன், தாடியுடன் திரிபவர்கள் கதாநாயகர்களாகவும், அவர்களை பெண்கள் உருகி உருகி காதலிப்பதாகவும் காட்சிகள் இடம் பெறுவது, எந்த அளவுக்கு விபரீதமானது என்பதற்கு என் நண்பரின் மகளே சாட்சி.

நண்பரின் மகள், எங்கள் ஏரியாவில் குடி பழக்கம், கஞ்சா, அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு வரும், ஒருவனை காதலித்தாள். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், "ரவுடிங்க தாம்பா பொண்டாட்டிய அன்பா வச்சுக்கிருவாங்க...' என்று, டயலாக் பேசி வருகிறாள்.

மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும், நண்பரை பார்க்கவே பாவமாக உள்ளது. சினிமா இயக்குனர்களே... வெற்றிப்படம் அமைய வேண்டும் என்பதற்காக, தவறான விதையை, "கதை' என்ற பெயரில் தூவாதீர்கள். நாளை... இதே நிலை, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால்... சிந்தியுங்கள்!
 
Top