Latest News

0
auT8r4I.jpg


நமது உணவுகளில், இட்லியை மிகச் சிறந்தது எனச் சொல்லும் உணவியல் நிபுணர்கள், ஊறுகாயை மோசமானது என்கிறார்கள். ஏன் தெரியுமா?

உணவைச் சுறுசுறுப்பாக ‘உள்ளே’ அனுப்பினாலும், ஊறுகாய் ஏற்படுத்தக்கூடிய வேண்டத்தகாத விளைவுகள்தான் காரணம்.

சிலருக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காது. ‘மாதா ஊட்டாத உணவை மாவடு ஊட்டும்’ என்பார்கள். ஆனால் ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஊறுகாயை தொடர்ந்தும், அளவின்றியும் சாப்பிடுவதால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்... ஜாக்கிரதை!

ரத்த அழுத்தம்

உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்துச் சாப்பிடும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சினை எதிர்கொண்டிருப்பார்கள். 

சிறுநீரகப் பாதிப்பு

ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

புற்றுநோய்

வர்த்தகரீதியில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஓர் ஆய்வு கூறும் முடிவு இது.

வயிற்றுப்புண்

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படக்கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம். 

வாந்தி உணர்வு 

அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கு ஊறுகாய்தான் காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தொடர்ந்து சாப்பாட்டோடு சேர்த்து அதிகமாக ஊறுகாயும் சாப்பிடும் போது இதுபோன்ற குமட்டல், வாந்தி உணர்வு ஏற்படலாம்.

மன அழுத்தம்

ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய்

ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படக்கூடும். 

செரிமானப் பிரச்சினை

ஊறுகாயை விரும்பிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஓர் உணவையும் அளவுக்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.

ஊறுகாய் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உப்பு, காரம்தான் மேற்கண்ட பிரச்சினைகளுக்குக் காரணம். கடைகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளிலும் இதே பிரச்சினை உள்ளது.

‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்றவர்கள் நமது முன்னோர். அமுதத்துக்கே அப்படி என்றால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களுக்குச் சொல்லவும் வேண்டுமா? 

ஊறுகாயை எப்போதாவது ‘தொட்டுக்கொள்ள’ மட்டும் செய்தால் மேற்கண்ட பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்!

கருத்துரையிடுக Disqus

 
Top