0

இது போன்ற நோட்டீஸ்களை நீங்கள் பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள்... பஸ்ஸில் தினமும் சென்றால் நிச்சயம் உங்களது கண்களில் தட்டுப்படும் இதை போன்ற பிட் நோட்டீஸ்கள்...
இதைப் பார்த்ததும் சகஜமாக கடக்க முடியவில்லை. அது எப்படி 8 வது படித்தாலும் வீட்டில் இருந்தபடியே 10000 சம்பாதிக்கலாம்? இது எப்படி என நண்பர்கள் குழுவோட சேர்ந்து கண்டு பிடிக்க எண்ணினோம்...


முதலில் இதைப்போன்ற 10 நோட்டீஸ்களை திரட்டி வந்து அனைத்து நோட்டீஸ்களில் உள்ள நம்பர்களுக்கும் தொடர்பு கொண்டோம்... அதில் பாதி எண்கள் உபயோகத்தில் இல்லை, சிலது தவறான நம்பர்களாக இருந்தது, சில ஆப் செய்து வைக்க பட்டிருந்தது, இரண்டு நம்பர்கள் உபயோகத்தில் இருந்தது.
 
 
கால் செய்து வேலை தேடி கொண்டு இருப்பதாகவும், நோட்டீஸை பஸ்சில் பார்த்து தொடர்பு கொள்கிறோம் என கூறியதும், நமது விவரங்களை கேட்டனர், கேட்ட பின்னர் ஒரு முகவரி தந்து ஒரு தேதியும் தந்து அந்த நாளில் அங்கு வந்து விடும்படி கூறினர்.

(அது ஒரு திருமண மண்டபம், பெரும்பாலும் இவர்கள் ஒரு பொது இடத்தில் தான் இப்படியான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர், பெண்களும் அப்போது தான் நம்பி வருவார்கள் என்று அப்படி ஒரு யுக்தி) நாமும் அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவர்கள் சொன்ன நாளில், சொன்ன இடத்திற்கு சென்றோம், அங்கே எங்களை போன்றே பல மக்கள் குவிந்து இருந்தனர். 10 மணிக்கு மிக நாகரீகமாக டீக்காக உடையணிந்து 10 பேர் கொண்ட குழு வந்தனர்.




ஒரு கலந்தாய்வு போல ஆரம்பித்தனர், ஒவ்வொருவரும் தனித்தனி டேபிள் போட்டு அமர்ந்து இன்டர்வியூ போல பேசி உங்களுக்கான வேலை உள்ளது, வெளிநாட்டில் இருந்து வரும் வேலை இது, நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து தந்தால் போதும், உங்களுக்கான கணினி தரப்படும் கம்பெனி மூலமாக என மிகத்தெளிவாக மிகத்தேர்ந்த மூளைச் சலவை செய்தனர். ரெசுயூமையும் பெற்று கொண்டனர். அதன் பின்னர் உங்களுக்கான வேலையை நாங்கள் பதிவு செய்கிறோம் அதற்கான அட்மிஷன் பீஸ் என 500 ரூபாய் கட்ட சொன்னார்கள்.

இப்போது சுதாரித்துக் கொண்டு, நண்பர்களில் ஒருவர் மட்டும் பணத்தை கட்டி அவர்கள் குடுத்த ஆஃபர் லெட்டரை, மற்றும் கம்பெனி முகவரி, விசிட்டிங் கார்டு அனைத்தையும் வாங்கி வந்தோம், மறுநாள் அவர்கள் குடுத்த முகவரிக்கு சென்று பார்த்ததில் அது ஒரு பாழடைந்த நிலையில் உள்ள வீடாக இருந்தது.


நம்முடன் சேர்ந்து பணம் கட்டிய பலர் நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள், ஏமாற்று வேலை என தெளிவாகி விட்டது, இருப்பினும் அந்த எண்களை தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் என கூறியது. (எதிர்ப்பார்த்தது தான்)


அந்த மண்டபத்தில் விசாரித்த போது நேற்றே காலி செய்து விட்டார்கள், அவர்கள் குடுத்த முகவரி போலி எனவும் அறியப்பட்டது.

இதில் இவர்கள் கையாண்ட யுக்தி என்னவென்றால், அனைவரையும் சாயந்திரம் வரை அமர வைத்து பின்னர் கிளம்பும் வேளையில் பணம் வாங்கியதே..!


இதில் இருக்கும் விபரீதம் என்னவென்றால் இவர்களிடம் மாட்டி கொள்ளும் நமது விவரங்கள் அடங்கிய ரெசுயூம், அதை வைத்து நம்மை சிக்கலில் சிக்க வைக்கவும் வாய்ப்பு உள்ளது.


இது ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறது என அறியப்பட்டது பின்னர் போலீஸ் மூலமாக, இது ஷேர் செய்யப்பட்ட செய்தி அல்ல, உண்மையான சம்பவம்.


எனவே இனி இதைப்போன்ற நோட்டீஸ்களை பார்த்தால் உஷாராக இருங்கள்!!!

கருத்துரையிடுக Disqus

 
Top