0

ஒவ்வொரு மனிதனுக்கு இடைவிடாத பணியின் காரணங்களாலும் மற்றும் பல காரணங்களாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் காட்சியை கண்டு வருகிறோம். மன அழுத்தம் என்பதுதான் ஒரு மனிதனின் நோய்க்கு முதல் அறிகுறி.

எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் நிம்மதியில்லாமல் அழுத்தமாக இருந்தால் சந்தோஷமாக வாழ முடியாது. மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்க்க வேண்டும் அல்லது போக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.


மன அழுத்ததிற்கு முதல் காரணமாக இருப்பது தூக்கமின்மை மற்றும் தீயகனவுகள்தான்.

நீங்கள் உங்கள் பணிகளை திருப்தியாகவும், சந்தோஷமாகவும் செய்தீர்கள் என்றால் மன அழுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் விரும்பாத, பிடிக்காத பணிகளை செய்து வந்தால் உங்களை மன அழுத்தம் தானாகவே தொற்றிக் கொள்ளும். அது உங்கள் மனதிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் தீங்கானது. எனவே நீங்கள் பார்க்கும் பணி, நீங்கள் விரும்பி பார்க்கும்படியாக அமைத்து கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

நீங்கள் நல்ல பணியில் இருந்து கைநிறைய சம்பாதித்தாலும், உங்களுக்கு ஏற்படும் சிறுசிறு மன அழுத்தத்தை போக்க ஆண்டாசிட் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ஆபத்துதான்.

நெஞ்சு எரிச்சல் மற்றும் குமட்டல் காரணமாக நீங்கள் ஆண்டாசிட் மாத்திரைகளை எடுத்து கொண்டால் ஒரு கட்டத்தில் அது உங்களை மன அழுத்தம் உடையவராக மாற்றிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வயிற்றுக்கோளாறு உள்பட பிரச்சனைகள் இருந்தால் நீங்களே டாக்டராக மாறி ஆண்டாசிட் மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்த்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மன அழுத்தம் தோன்றுவதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் விட்டுவிட்டு வரும் தலைவலி அல்லது தொடர் தலைவலி. ஹெல்த்லைன்.காம் என்ற இணையதளத்தில் பிரபல எழுத்தாளர் கிம்பர்லி ஹாலந்து என்பவர் கூறியபோது, மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

வீட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படும் தலைவலி உங்களை ஒரு கட்டத்தில் மன அழுத்தம் பாதிக்கப்பட்டவராக மாற்றிவிடும். எனவே தலைவலிக்கு உரிய சிகிச்சை எடுத்து கொள்வதோடு, வீட்டிலும் அலுவலகத்திலும் முடிந்த வரை சந்தோஷத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்

கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கும் போதோ, அல்லது ஏதாவது அலுவலக மீட்டிங் நடக்கும்போது ஏதாவது காரணத்திற்காக பற்களை நறநற என கடிக்கும் ஆசாமியா நீங்கள், அப்படியானால் உங்களை மன அழுத்தம் என்ற நோய் மிக அருகில் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறும்போது பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஒருவருக்கு அதிகரிக்கும்போது அவர் தானாகவே தனது பற்களை கடித்து கொள்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் பற்களை கடிப்பது உங்கள் பற்களுக்கும் கெடுதல் ஏற்படுவது மட்டுமின்றி தாடை வலியையும்
ஏற்படுத்தும். எனவே பற்களை கடிக்கும் பழக்கத்தை துரத்திவிடுங்கள்
மன அழுத்தம் ஏற்படுத்துவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஞாபக மறதியை கூறுவதுண்டு. இதை பிரபல எழுத்தாளர் ஹெய்டி மிட்சல் உறுதி செய்துள்ளார். அடக்க முடியாத மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக மெமரி லாஸ் மற்றும் அதை சார்ந்த காரணங்கள் இருப்பதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட கூறுகின்றனர்.

பயம் மனிதனுக்கு ஒரு மிகப்பெரிய எதிரி. மனதின் வலிமையை குறைத்து மன அழுத்தத்தை ஏற்படுவதில் பயம் ஒரு முக்கிய பங்கு உண்டு.
மேலதிகாரிக்கு பயம், ஆசிரியர்களிடம் பயம், பொதுமக்களிடம் பயம் என எங்கும் பயம் எதிலும் பயம் என தெனாலி' கமல் போல் இருந்தால் உங்களை மன அழுத்தம் மிக விரைவாக பற்றிக் கொள்ளும்.

இந்த பயத்தின் காரணமாக மன அழுத்தம் மட்டுமின்றி விரைவான இதய துடிப்பு, வியர்த்தல், நடுங்குதல், குமட்டல், குளிர், மற்றும் மார்பு வலி ஆகியவையும் ஏற்படவும் காரணமாக அமைகின்றது.

நீங்கள் ஒரு சிறந்த வேலையில் இருக்கின்றீர்கள். மேலும் அமைதியான, மகிழ்ச்சியான மனிதராக இருக்கின்றீர்கள். அதே நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக இருந்தால் நீங்கள் சரியான வழியில் செல்கிறீகள் என்று அர்த்தம். கோபம் வரும் இடத்தில் கோபத்தை வெளிப்படுத்தினால் வேலையும் சிறப்பாக நடக்கும்.

உங்கள் அழுத்தமும் கோபத்தை வெளிப்படுத்தியவுடன் குறைந்துவிடும். மனதிற்குள்ளேயே கோபத்தை பூட்டி பூட்டி வைத்தால் அது ஒருநாள் பயங்கரமாக வெடித்து உங்கள் மன அழுத்தம் அதிகமாகிவிட காரணமாகிவிடும். அதே நேரத்தில் தேவையில்லாமல் கோபப்படாதீர்கள். அதுவும் கெடுதல்தான்.

வெள்ளிக்கிழமை மாலை முதல் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கொண்டாடும் நீங்கள் ஞாயிறு இரவு வந்தவுடன் திங்கட்கிழமை செய்யக்கூடிய வேலையை நினைத்து நீங்கள் அச்சப்பட்டால் உங்களை மன அழுத்தம் துரத்தி வருகின்றது என்று அர்த்தம்.

அதே நேரத்தில் திங்கள் காலையை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தால் நீங்கள் பார்க்கும் வேலையை நீங்கள் மனதார விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். எனவே நீங்கள் எந்த மாதிரியான மனிதர் என்பதை ஞாயிறு இரவு வெகு எளிதாக காட்டிக் கொடுத்துவிடும்.

கருத்துரையிடுக Disqus

 
Top