மேய்ச்சல் வசதி சுத்தமாக இல்லாத இடங்களில் பரண் மேல் வளர்ப்பு முறையிலும் ஆடு வளர்க்கலாம்.
1.. ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து, மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலேயே நாள் முழுவதும் அடைத்து வளர்க்கப் பட வேண்டும்.
2.. ஆடுகளுக்குத் தேவையான பசும்புல், தீவனக் கலவை, காய்ந்த புற்கள் மற்றும் மர இலைகள் அனைத்தையும் கொட்டகையிலேயே கொடுத்துப் பழக்க வேண்டும். 
இம்முறையில் வெள்ளாடுகளை தரையிலிருந்து 4 அடி உயரத்தில் சல்லடைத் தரையை மரச்சட்டத்திலோ அல்லது கம்பிகளிலோ கட்டி வளர்க்க வேண்டும்.
ஆடுகளின் சாணம் மற்றம் சிறுநீர் கீழே விழுவதற்கு ஏற்றவாறு இரு பலகை அல்லது கம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 1-2 செ.மீ. இருக்குமாறு அமைக்க வேண்டும். இதனால் ஆடுகள் சுகாதாரமாகவும், நோய் பாதிப்பின்றியும் இருக்கும்.
இம்முறையில் ஆடுகளுக்கு தேவையான பசுந் தீவனத்தை கயிற்றில் கட்டியோ அல்லது இரண்டு அடி உயரத்தில் மரப்பெட்டியில் வைத்தோ அளிக்க வேண்டும்.
இம்முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும். ஒவ்வொரு ஆட்டிற்கும் 10 சதுர அடி இடம் போதுமானது.
மேய்ச்சல் நிலம் இல்லாதவர்கள் இந்த முறையில் வளர்க்கப்படும் ஆடுகள் மேய்ச்சலினால் வீணாகும் சக்தியை சேமித்து வைத்தால் அதிக உடல் எடையை அடைகின்றது.
ஆடுகள் நாளொன்றுக்கு 120 முதல் 160 கிராம் வரை உடல் எடை அதிகரிக்கிறது.
இம்முறையில் வளர்க்கப்படும் ஆடுகளை நன்முறையில் பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும் அதிக எடையுடனும் காணப்படும். 
இம்முறையில் வளர்க்கப்படும் ஆடுகள் மேய்ச்சலினால் சக்தியை வீணாக்காமல் சேமித்து வைப்பதால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்ப்பதால் நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். குறிப்பாக புற ஒட்டுண்ணிகளான பேன், உண்ணி, தெள்ளுப்பூச்சி பாதிப்பு, ரத்த கழிச்சல், குடற்புழுக்களின் தாக்கம், சளி போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.  அதனால் அதற்கு உண்டான பராமரிப்பு முறைகளை தவறாமல் கடைபிடித்து வளர்க்க வேண்டும்.
கொட்டகை அமைத்தல்:
ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க காற்றோட்ட வசதியுடன் கூடிய மேடான வடிகால் வசதியுள்ள பகுதியை தேர்ந்தெடுத்து கொட்டகை அமைக்க வேண்டும்.
கொட்டகையானது நீளவாக்கில் கிழக்கு - மேற்காக அமைக்க வேண்டும். கொட்டகையின் அகலம் 20 அடி முதல் 25 அடி வரை இருக்கலாம். அகலம் அதிகமானால் காற்றோட்டம் பாதிக்கப்படும்.
ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீளத்தை அதிகரித்துக் கொள்ளலாம். கொட்டகையின் உயரம் நடுப் பகுதியில் 9-21 அடி உயரத்திலும் சரிவான பக்கப்பகுதி 6-9 அடி உயரத்திலும் அமைய வேண்டும்.
ஆட்டுக் கொட்டகையின் கூரை ஆஸ்பெஸ்டாஸ், மங்களூரு ஓடு அல்லது கீற்று கொண்டு அமைக்க வேண்டும்.
பரண் மேல் வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு 10 சதுர அடி இடவசதி ஒவ்வொரு ஆட்டிற்கும் தேவைப்படும். மேலும் 20 சதுர அடி இடம் கொட்டகையை ஒட்டி திறந்தவெளி பகுதியில் கொடுக்க வேண்டும்.
வெள்ளாடுகளுக்கான தீவனத் தொட்டிகள் மரத்தினால் செய்யப்பட்டு ஒன்றரை அடி உயரத்தில் ஒன்றரை அடி உள்பக்கம் குழியாக இருக்குமாறு அரைவட்ட வடிவில் அமைக்க வேண்டும்.