0

‘சிரப் குடிச்சா சரியாயிடும்’ என்பது பரவலான பாமர நம்பிக்கை! மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் வாங்கப்படுகிற மருந்துகளில் இருமல் மருந்துக்கே முதலிடம்!ஆனால்... ‘‘இருமலின் தன்மை தெரியாமலோ, மருத்துவரின் பரிந்துரை இல்லாமலோ எடுத்துக் கொள்கிற சிரப்புகள், உயிருக்கே உலை வைக்கலாம்’’ என்கிற எச்சரிக்கையுடன்
ஆரம்பிக்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் திருப்பதி. ‘‘இருமல் என்பது ஒருவிதமான பாதுகாப்புனு சொல்லலாம். தூசியோ, கிருமியோ, வேறு தேவையற்ற பொருளோ மூச்சுக்குழாய்க்குள்ள போறதைத் தடுக்கிற ஒரு அரண்தான் அது. இருமும்போது, குரல்நாண் மூடிக்கும். அதிக அழுத்தம்
கிளம்பறதால, தேவையில்லாத பொருள் வெளியே தள்ளப்படும். இது தெரியாம, லேசா இருமினாலே, அதை பிரச்னையா நினைச்சு, உடனடியா சிரப் வாங்கிக் குடிக்கிற பழக்கம் இருக்கு. அது ரொம்பவே ஆபத்தானது’’ என்கிற டாக்டர், ஏன் ஆபத்து என்பதையும் விளக்குகிறார். ‘‘இருமலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். வறண்ட, எரிச்சலான இருமல் ஒரு வகை. இன்னொன்று அதிக சளி சேர்ந்திருக்கிறதோட விளைவா உண்டாவது. மூன்றாவது ஆஸ்துமா மாதிரி பிரச்னைகளோட விளைவா உண்டாவது.
இதுல முதல்வகை வறட்டு இருமலுக்கு ‘சப்ரசென்ட்’னு சொல்லக்கூடிய சிரப்கள் எடுத்துக்கணும். அது அந்த வகை இருமலைத் தடுத்து நிறுத்தும்.
சளி காரணமா உண்டான இருமலுக்கு ‘எக்ஸ்பெக்டோரன்ட்’னு போட்டிருக்கிற சிரப் தரணும். அது உள்ள இருக்கிற இறுகின சளியை,
இளக வச்சு வெளியே கொண்டுவரச் செய்யும். ஆஸ்துமா காரணமா வந்த
இருமலுக்கு, காற்றுக்குழாய்களை விரிவடையச் செய்ய மருந்துகளைக்
கொடுக்க வேண்டியிருக்கும். மக்களுக்கு எது, எந்த வகையான இருமல்னு தெரியாம, பொதுவா மருந்துக் கடைகள்ல போய் இருமலுக்கு சிரப்
கேட்டு வாங்கிக் குடிப்பாங்க. சப்ரசென்ட்டுக்கு பதில் எக்ஸ்பெக்டோரன்ட்டையோ, சளியை வெளிக்கொண்டு வரக்கூடிய
இருமலுக்கு, அதை வரவிடாமச் செய்யற சப்ரசென்ட்டையோ மாத்திக்
குடிச்சா ஆபத்துதான். குறிப்பா சப்ரசென்ட் வகை சிரப்புகளை அடிக்கடி குடிச்சுப் பழகறவங்க, ஒரு கட்டத்துல அதுக்கு அடிமையா மாறக்கூடிய
அபாயமும் உண்டு. டிரைவர், தொழிற்சாலைல வேலை பார்க்கிறவங்க
மாதிரியான ஆட்கள், தாமாவே இருமலுக்கு இந்த சப்ரசென்ட் மருந்துகளைக்
குடிச்சுப் பழகியிருப்பாங்க. வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இதைக்
குடிக்கிறப்ப, அது தூக்கமும் இல்லாத, மயக்கமும் இல்லாத ஒருவிதமான
போதை உணர்வைத் தரும். வேலையில கவனம் சிதறவும், விபத்துகள்
நடக்கவும் காரணமாகும். ரொம்பவும் சின்னக் குழந்தைகளுக்கு இருமல்
மருந்து கொடுக்கிறதும் ஆபத்தானது. குழந்தைக்கு நேரடியா மருந்து கொடுத்தாலும் சரி, இருமல் மருந்து எடுத்துக்கிட்ட தாய்கிட்ட தாய்ப்பால்
குடிச்சாலும் சரி, அந்தக் குழந்தைக்குப் பாதிப்புகள் வரும். இருமல் மருந்து குடிக்கிறப்ப, அது நேரடியா மூளைக்குப் போய், இருமலைத் தடுக்கற வேலைக்கான சிக்னலை கொடுக்கும். அதே மூளைப்பகுதிலதான்
சுவாசத்துக்கான வேலையும் நடக்குது. இருமல் மருந்து எடுத்துக்கிட்டதோட பக்கவிளைவா, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுவாசமே தடைபட்டு,
உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். குழந்தைங்களுக்கு வரக்கூடிய இருமல்
தானாவே சரியாயிடும். மத்தவங்களும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கிறது, சூப் குடிக்கிறது, ஆவி பிடிக்கிறது மூலமா அதைக்
கட்டுப்படுத்தலாம். 3 நாளைக்கு மேலயும் இருமல் நீடிச்சாலோ, சுவாசப் பிரச்னையோ, வாந்தியோ இருந்தாலோ மருத்துவரைப் பார்க்கறதே பாதுகாப்பானது’’ என்கிறார் டாக்டர் திருப்பதி. இருமலுக்காக எடுத்துக் கொள்ளத் தொடங்கி, பிறகு அது தரும் போதைக்காக இருமலே இல்லாமலும்
சிரப் எடுத்துக்கொள்கிற அடிமைகள் பற்றிப் பேசுகிறார் மனநல மருத்துவர் ஆனந்தன். ‘‘நார்கோடிக்ஸ் வகையான இருமல் மருந்துகளே பெரும்பாலும்
அடிமைத்தனத்தை ஏற்படுத்தும். ‘கோடைன்’ என்ற வேதிப்பொருள் கலந்த
இருமல் மருந்துகளை தினம் பாட்டில், பாட்டிலாகக் குடிக்கிறவங்க இருக்காங்க. இந்த கோடைன் என்கிற மருந்தானது, ‘ஹெராயின்’னு சொல்லக்கூடிய பிரவுன் சுகர், Pain killerனு சொல்லக்கூடிய வலி நிவாரணி வகையைச் சேர்ந்தது. மருந்துக் கடைகள்ல வேலை செய்யற பையன்கள்,
மருந்துக்கடை வச்சிருக்கிறவங்க பலரும் இந்த வகை இருமல் மருந்துகளுக்கு அடிமையாகறதைப் பார்க்கறேன். சில டாக்டர்களுக்கு கூட
கோடைன் அடிமைத்தனம் உண்டு. இஷ்டத்துக்கு கடையில் சிரப் வாங்கிக்
குடிப்பது, இப்படியான போதை அடிமையாக யாரையும் ஆக்கிவிடும்!’’ என்று எச்சரிக்கிறார்

கருத்துரையிடுக Disqus

 
Top