0
15 ரூபாய்க்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை பொது தேர்தல் நடக்கிறது. கூட்டணி விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருக்க,தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்தும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் உரிய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. “பெல்’ நிறுவன அதிகாரிகள் முகாமிட்டு இப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 10 சட்டசபை தொகுதிகளுக்குரிய சுமார் 7 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இவைகளில் ஆய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டையும் ஒரு ஆவணமாக உள்ளதால் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தும் அதனை தொலைத்து விட்ட வாக்காளர்களுக்கு நகல் (டூப்ளிகேட்) வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஆர்.டி.ஓ, தாலுகா அலுவலகங்கள், குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளில் இதற்கான விண்ணப்பங்கள் “001சி’ வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15 ரூபாய் கட்டணத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும்.இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அந்தந்த தேர்தல் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கருத்துரையிடுக Disqus

 
Top