இந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக  எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித்  தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  சமூக மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல  விஷயங்களை  விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன்  
 
    7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய  தொடர் இது ஒன்றாகத்தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.
   முதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.
  கனவுகளுடனும் குறிக்கோளுடனும்  ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று  தெரியவில்லை)  அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை  7C  வகுப்பு ஆசிரியராக  இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.
        வேறு ஆசிரியர் எவரும்  அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.
    ஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
  தலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார்.  மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.
  வாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வருவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும்  ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.
  ஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு  படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.
ஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு  ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா  இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும். 
    ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான்  ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப்  பின்னணியில் இருந்து  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
  தலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள்  நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும்   குறைவில்லை. 
   உங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு  ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக்  கேட்க அவன் தெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர்  மீது வந்து  விடுகிறது.
  ஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.
    அடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில்  மாணவர்கள்  ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா  என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார்? என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக்  என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ! என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.
   இப்படியும்  ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
      தமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான  தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து  விடலாம்.
 
Top