“உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்…? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “நாப்கின். விடயத்தில்’ அதிர்ச்சியான தகவல் சொல்கிறார் பேராசிரியர் முகமது ஷாபீர்.


“பயோடெக்னோலஜி’ துறையில் ஆய்வு செய்துவரும் இந்தியாவை சேர்ந்த ஷாபீர் அதன் ஒரு பகுதியாக “நாப்கின்‘ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

“இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில்

முதல் லேயர்

சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது.

இரண்டாவது லேயர்

மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்,

முன்றாவது லேயர்

ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது)

கீழ் லேயர்

பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் இரசாயனம் இருப்பதுடன் ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும் போது நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த இரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. புற்று நோய்க்கான மூலக் காரணிகளில்… இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர இத்தனை இரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சினை, வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்று நோய் என்று பல பிரச்சினைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.

நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் திகதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பனி தயாரிப்புகளில் “தயாரிக்கப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்.

“இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும் 45 வயது வரை மாதத்தில் மூன்று நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. இரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது’ என்று நிறுத்தினார்.

“இதற்குத் தீர்வுதான் என்ன?’ என்று அவரிடமே கேட்டபோது, “வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக்கொடுக்கும்’ மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும். இதோ… இந்த நாப்கின் ஹொங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எதுவும் செய்யப்படாத துணிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜெல் என்பது மக்காச்சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ள “அனியன்ஸ் சிப்’ கிருமி நாசம் செய்யும் தன்மை கொண்ட பொருள். மேலும் இதில் இருந்து வெளியாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன் அதை சமன் செய்ய வல்லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவிக்காதது.

வெளிநாட்டு  நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால் அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள். விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் தர மேம்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காத்து நம் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத்தான் காட்டுகிறது’ என்று சாடிய ஷாபீர், “மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுதான் பெண்களை பல பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்’ என்று வலியுறுத்தினார்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனையுமே சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி என்னிடம் போனில் கேட்டதுமே… பிரபல கம்பனிகள் தயாரிக்கின்ற சில நாப்கின்களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட்கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியோ எந்த விபரங்களும் அதில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது.

முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதில் துணியை பயன்படுத்தினார்கள். ஆனால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்துக்குரியதே.  அப்படி பார்க்கும் போது நாப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விடப் போகிறோம் என்பதால் பிரச்சினை இல்லை. பொதுவாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அதுகூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படும். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை. மற்றபடி எந்த முறையில் சுத்திகரிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்களைப் பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ.முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்’ என்று அக்கறையோடு சொன்னார் டாக்டர்.
 
Top