இன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஒரு வேலையை மட்டும் செய்து கிடைக்கும்
வருமானத்தில் நிம்மதியாக வாழ்க்கையை நடத்த முடியாது. கணவன்,மனைவி இருவரும்
வேலைக்கு சென்றாலும் கூட சில சமயம் பற்றாக்குறை பட்ஜெட் வருவதை
பார்க்கிறோம். எனவே பகுதி நேரமாக ஒரு சிறு வேலை அல்லது தொழில் செய்தால்
அதில் கிடைக்கும் வருமானத்தில் நாம் நம்முடைய தேவைகளை திருப்திகரமாக
பூர்த்தி செய்யலாம்.
பங்கு சந்தை என்பது ஒரு கடல். தினமும் கோடிக்கணக்கான பணம் புழங்கும் ஒரு
தொழில். இதை ஒரு தொழிலாகவும் செய்யலாம், சூதாட்டமாகவும் செய்யலாம். தொழிலாக
செய்தால் நம்முடைய பணமும், மனமும் நம் கட்டுக்குள் இருக்கும். சூதாட்டமாக
செய்தால் இரண்டும் நம் கையை மீறி சென்றுவிடும்.
முதலில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முதலில் ஒரு தரகரிடம் கணக்கு
ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஒரு சிறு முதலீட்டை வைத்து பங்கு சந்தையில்
நோட்டம் விட வேண்டும். முதலிலேயே பெரும் எண்ணிக்கையில் பங்குகளை
வாங்கிவிடக்கூடாது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த
நிறுவனத்தின் வரவு,செலவு, லாபம்,நஷ்டம் முதலியவற்றை இணையத்தில் தேடி அலசி
பார்த்து பின்னர்தான் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து
முடிவெடுக்க வேண்டும். நாம் வாங்கிய நிறுவனத்தின் பங்குகள் குறைந்து கொண்டே
வந்தால், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் சராசரி செய்ய வேண்டும்.
அவசரப்பட்டு விற்று விடக்கூடாது. பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தோடு
இருப்பதுதான் பங்குச்சந்தையின் இயல்பு. இன்றைக்கு குறைந்திருக்கும் ஒரு
நிறுவனத்தின் பங்குகள் சிறிது காலத்தின் மீண்டும் ஏறிவிடும். எனவே சராசரி
செய்துவிட்டு சிறிதுநாட்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

தினவணிகம் செய்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். எல்லா தரகு
நிறுவனங்களும் தினவணிகம் மட்டுமே செய்யுங்கள் என்றும் அதனால் லாபமோ,நஷ்டமோ
அன்றே முடிவு தெரிந்துவிடும் என்றும் அறிவுரை கூறுவர். ஆனால் அதில்
பெரும்பாலும் லாபம அடைவது தரகர்கள்தான். தினமும் விற்று,வாங்கினால்தான்
அவர்களுக்கு தரகுத்தொகை கிடைக்கும் என்ற காரணத்தினால் அவர்கள் அவ்வாறு
உபதேசம் கூறுவார்கள். எனவே லாபம் கிடைத்தால், அன்றைய நாளிலேயே வெளியே
வந்துவிடலாம். தவறில்லை. ஆனால் நஷ்டம் ஏற்பட்டால், சிறிதுகாலம் பொறுத்து
லாபத்துடன்,அல்லது நம்முடைய அசல் பணத்தையாவது எடுத்துக்கொண்டுதான்
வரவேண்டும். இதற்கு முதலில் பொறுமை அவசியம்.
பங்குச்சந்தையில் நுழைபவர்கள் முதலில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள
வேண்டும்., பங்கு வர்த்தகம் குறித்த மென்பொருள்கள், தரகு நிறுவனங்கள் தரும்
குறுஞ்செய்திகள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டு வர்த்தகம் செய்ய
வேண்டும். சந்தை எவ்வழியில் செல்கின்றதோ, நாமும் அதன் போக்கிலேயே போக
வேண்டும். சந்தை இறங்கிக் கொண்டிருந்தால், விற்றுவிட்டும் வாங்கவும்,
ஏறிக்கொண்டிருந்தால் வாங்கிவிட்டு விற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். சிலர்
பங்கு சந்தை இறங்கிக் கொண்டே இருந்தால் பங்குகளை வாங்கிக் கொண்டும்,
ஏறிக்கொண்டே வந்தால் விற்றுவிட்டும் வருவர். இது தவறு.

மேலும் இருக்கின்ற பணத்திற்கு ஒரே நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக
வாங்கக்கூடாது. பலவிதமான பங்குகளை பகிர்ந்து வாங்கவேண்டும். அப்பொழுதான்
ஒரு நிறுவனத்தின் பங்குகள் இறங்கிக்கொண்டு வந்தாலும், இன்னொரு நிறுவனம்
நம்முடைய முதலீட்டைக் காப்பாற்றும். காலையில் பங்குச்சந்தை தொடங்கியவுடனே
பங்குகளை அவசர அவசரமாக வாங்கவோ, விற்கவோ கூடாது. காலை 9.15 மணிக்கு சந்தை
தொடங்குகிறது என்றால் 10.00 மணிவரை பொறுமையாக சந்தையின் போக்கை கவனிக்க
வேண்டும். பின்னரே வாங்குவதா, விற்பதா என்பது குறித்து முடிவெடுக்க
வேண்டும்.

பெரும்பாலானோர் செய்யும் தவறு வாங்கிய பங்குகள் சிறிதளவு லாபம் கிடைத்தால்
போதும் என்று லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரமாட்டார்கள். இன்னும்
கொஞ்சம் விலை உயரட்டும் என காத்திருப்பார்கள். அவ்வாறு செய்வது மிகப்பெரிய
தவறு. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவுடனே எந்த விலைக்கு விற்க
வேண்டும் என முடிவு செய்திட வேண்டும். அந்த விலை வந்தவுடன் உடனே விற்றுவிட
வேண்டும். கிடைக்கின்ற லாபத்தை விட்டுவிட்டால், பின்னர் திடீரென சந்தை
இறங்கினால், கிடைத்த லாபத்தை கைவிடுவதோடு, சிலசமயம் நமக்கு நஷ்டத்தையும்
ஏற்படுத்திவிடும். எனவே போதும் என்ற மனதுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.
