என் நண்பன் வீட்டில் நடந்த நல்ல சம்பவம் இது. அவனது மனைவி ஹவுஸ் ஒய்ப் தான். பிளஸ் 2 வரை படித்தவர். அவர்களது மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஒருமுறை, அந்த நண்பன் வீட்டிற்கு சென்றபோது, அவனது மனைவி பற்றி விசாரிக்கும் போது, "அவள் டியூஷனுக்கு சென்றிருக்கிறாள்' என்று, என் நண்பன் சொல்ல, நான் புரியாமல் விழித்தேன்.

அதை புரிந்து கொண்ட அவன், "அவள் பிளஸ் 2 படித்திருந்தாலும், 10வது கணக்கில் எக்ஸ்பர்ட் கிடையாதுடா. ஆனால், பையன் கணக்கில் சுமார் தான். அதனால, இவள் ஒரு டீச்சர்கிட்ட பத்தாவது கணக்குக்கு டியூஷன் போகிறாள். சந்தேகங்களை தெளிவுபடுத்தி விட்டு, வீட்ல பையனுக்கு நல்லா புரியும்படி சொல்லித் தருகிறாள்.

"டியூஷனில் பையனை நல்லா கவனிப்பாங்கன்னு சொல்ல முடியாது. டியூஷனுக்கு பையன் போய்ட்டு வர்ற நேரம் மிச்சம். பையனுக்கு கொடுக்கற பீஸ் தான் அவளுக்கும் செலவாகும். அதே நேரம், ஒரு அம்மாவா, தன் பையனுக்கு அக்கறையா, பொறுமையா, புரியற வரைக்கும் சொல்லிக் கொடுக்கலாம். எப்படி என் மனைவியோட ஐடியா?' என்று முழு விவரத்தையும் விளக்கினான்.

பொதுவாக, தாய்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியை என்ற உண்மையை, என் நண்பனின் மனைவி, 200 சதவீதம் உறுதியாக்கி விட்டார் என்றே தோன்றியது.
 
Top