வெற்றி என்பது ஒரு நிரூபணம்; படிப்பினை அல்ல. ஆனால், தோல்வி என்பது பல சமயங்களில் நமக்கு படிப்பினை. வெற்றி அடைவது... அதற்காக மகிழ்வது… கொண்டாடுவது பெரிதல்ல. தோல்வியின் போது நமது மனநிலை எப்படி...? என்பதுதான் மிக முக்கியம். தோல்வியை ஒரு சறுக்கலாக எண்ணாமல் ஒரு படிக்கட்டாக எண்ணும் போது வெற்றிக் கோபுரம் நமக்கு வெகு அருகில் அதுவாகவே வந்து விடும்.

விழாமலே ஓடும் குழந்தையை விட, விழுந்து விழுந்து அதே வேகத்தில் எழுந்து எழுந்து ஓடும் குழந்தைகள்தான் நம்மை மிகவும் கவரும். நடந்து முடிந்தவைகளை ஒரு சோதனை என்றோ… பயிற்சி என்றோ நினைத்துக் கொண்டு தொடர்ந்தோமானால் இனி நடக்க வேண்டியவற்றை அப்பயிற்சியின் அடிப்படையில் தெளிவாகத் திட்டமிட முடியும்.


முன்னேற்றம் அடைந்தவர்களிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான குணம் யாதெனில் தோல்வியை எளிதாக எதிர் கொள்வதுதான். வெறும் சுயபச்சாதாபமும் சுய ஆறுதலும் எந்தவிதத்திலும் உதவாதவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். “வெற்றியை ஏற்றுக் கொள்வது போல் தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்” என்பதே அவர்களது மேலான தத்துவமாக இருக்கும். சொல்லப் போனால் தோல்வியையும் பெரும் சோதனைகளையும் எதிர் கொண்டவன்தான் மிக அதிக கவனத்துடன் செயல்படுவான் முன்னேறுவான்.

நமது தோல்வியின் போது மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்லும் விமர்சனங்களையும், ஏளனங்களையும் ஏகடியங்களையும் அப்படியே நம்பி சோம்பி விடக்கூடாது. நமது பலமும் பலவீனமும் நமக்குத்தானே தெரியும். நமது பாணி ஜெயிக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து வெற்றியடைய வேண்டும் அல்லது வெற்றிக்கான பாணியை தோல்விகளின் அடிச்சுவட்டில் கண்டெடுத்து வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும்.
 
Top