முரேனா: கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும், மகேஷ் என்ற நபருக்கு, "ராக்கி' கட்டி, தங்களது சகோதரராக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று, "ரக்ஷா பந்தன்' விழா நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம், கடியாஹார் என்ற ஊரில் வசிக்கும் மகேஷ், 56, என்பவருக்கு, 12 ஆயிரத்து 672 பெண்கள், ராக்கி கட்டி, தங்கள் சகோதரராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.கிராமப் பெண்கள் அனைவரும், அவரை சகோதரராக ஏற்க காரணமும் உள்ளது. கடந்த, 21 ஆண்டுகளாக, சகோதரர் இல்லாத பெண்களின் வீட்டுத் திருமணங்களில், அந்தப் பெண்களின் சகோதரர் செய்ய வேண்டிய, அனைத்து மரியாதைகளையும் மகேஷ் செய்து வந்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாக, 12 ஆயிரம் பெண்கள், அவரை சகோதரராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

"மகேஷ் மாமா' என, அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு, நேரடியாக ராக்கி கட்ட முடியாத பெண்கள், பல நகரங்களில் இருந்தும், ராக்கி கயிறுகளை அனுப்பியும் உள்ளனர்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே கூட, ஒற்றுமையில்லாத இந்த காலத்தில், 21 ஆண்டுகளாக, ஒருவரை தங்களது சகோதரராக ஏற்று, ஆண்டுதோறும், பெண்கள் ராக்கி கட்டுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
Top