0
மனிதன்வாழ அடிப்படை தேவைகளாக விளங்குவது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம். இவற்றில் முதன்மையானது உணவு. மக்கள்  உண்ணும் உணவு மற்றும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. மனிதன் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ  மிகவும் அவசியம் சத்தான உணவு.

“உணவே மருந்து“ என்ற வழிமுறையில் இருந்த நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்.இன்றைக்கோ அவசரம் அவசரமாக, சமைத்தோ, சமைக்காததோ, வேகாததோ, வேக வைத்ததோ என எதையாவது சாப்பிட்டு உடல் நலத்தை  கெடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் நடைமுறை அதிகமாகிவிட்டது. அட்டைப்பெட்டி, பேப்பர்,  பிளாஸ்டிக் போன்றவற்றில் பதப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு வகைகள், பாஸ்ட்புட் போன்ற பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது. நாகரீக  வளர்ச்சி, புதுவகையான சுவை என்ற பெயரில் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். உணவே மருந்து என்ற நிலை மாறி தற்போது  மருந்தே உணவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை தரும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து  உண்டாலே நம்மை நாம் நோயி லிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதுவும் தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும்  தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது. இயற்கை உணவு முறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும்  கடைபிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் நம்மால் பாதுகாக்க முடியும்.

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைத் திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். உண்ட உணவு,  செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென தமிழ் மருத்துவம் கூறுகிறது. எனவே உடல் நலத்திற்கு பொருந்திய உணவு எது? பொருந்தா உணவு எது? என ஆராய்ந்து, தெளிந்த உணவு முறையை கடைபிடித்தாலே உடலுக்கு  தீங்கு விளை விக்கும் நோய்கள் நம்மை அணுகாது.




இஞ்சி:

பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யும். காலையில்  வெறும் வயிற்றில் பெரு விரல் அளவுக்கு இஞ்சியை தோல் சீவி விட்டு வாயில் போட்டபின் சிறுக சிறுக ஊரும் எச்சிலை விழுங்க சற்று நேரத்தில்  நல்ல பசி எடுக்கும்.



சுக்கு:
மஞ்சளை போலவே வடிவம் கொண்டது சுக்கு. இதற்குத்தான் உபயோகிக்க வேண்டும், இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும்,  எதற்கும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வாயு தொல்லை, வாத நோய், வயிற்று குத்தல், தலை வலி, பல் வலி, காது குடைச்சல்  போன்றவற்றை போக்கும். பசியைத் தூண்டும்.



சுக்கு:
 
மஞ்சளை போலவே வடிவம் கொண்டது சுக்கு. இதற்குத்தான் உபயோகிக்க வேண்டும், இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும்,  எதற்கும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வாயு தொல்லை, வாத நோய், வயிற்று குத்தல், தலை வலி, பல் வலி, காது குடைச்சல்  போன்றவற்றை போக்கும். பசியைத் தூண்டும். மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் பெரு விரலில் பாதி அளவுக்கு தோல் இல்லாத சுக்கை இஞ்சியை சாப்பிட்டது போலவே சிறுக  சிறுக சாப்பிட வேண்டும். பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல் தோல் நீக்கி நறுக்கி ஒரு பெரிய டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி சிறிது பால், சர்க்கரை  கலந்து தினமும் இருவேளை குடித்துவர மேற் கூறிய நோய்கள் நீங்கும்.



கடுக்காய்:
 

இஞ்சி, சுக்கு சாப்பிட்டதுபோல் மாலையில் சாப்பிடுவதற்கு முன் கடுக்காய் விதையை எடுத்துவிட்டு வாயில் போட்டால் துவர்ப்பாக இருக்கும்.  கடுக்காய் சாப்பிடும்போது மாத கணக்கில் குடலில் தங்கியுள்ள கழிவுகளை அகற்றுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கும், இளமையை பாதுகாக்கும்,  ஐம்புலன்களுக்கும் சக்தி தரும். கனமான தொடைப்பகுதியை சுருக்கும், தோல் வியாதியை குணப்படுத்தும், சுவாச நோய்களை கட்டுப்படுத்தும், ரத்த  நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்தும். இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது.



மஞ்சள்:
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், விளக்கில் மஞ்சளை சுட்டு அந்த புகையை மூக்கில் காட்டினால் உடனே சரியாகும். கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும்,  கட்டியாவதையும் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடற்பூச்சிகளை கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோய்களை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளி,  சரும நோய்களை போக்கும்.



மிளகு:
இது சிறந்த ஆன்ட்டிபயாடிக் ஆகும். சாதாரண சமையலில் மிளகும் சீரகமும் சேரும்போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடும். 10 மிளகு  இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு வீக்கத்தை குறைக்கும். வாய்ப்புண், நெஞ்சில் சளி ஆகியவற்றை குணமாக்கும்.  அதிக அளவு வியர்வையை தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது.



சீரகம்:
சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக  இருக்க உதவுகிறது. சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான  நிலையில் வைக்கக் கூடியது. வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.



பூண்டு:


பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டு ஒரு சிறந்த கிருமி  நாசினி. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்ப்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும். உடல்  பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைக்கும். பசியை  நீக்கும். பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும்  கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.



வெங்காயம்:

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. குளிர்ச்சி உண்டாக்கி ரத்தத்தை தூய்மைப்படுத்தும் சக்தி  கொண்டது வெங்காயம். வெங்காயம் இதயத்தின் நண்பன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை  இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில்  சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை  கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில்  தடவினால் வலி குறைந்துவிடும்.



பெருங்காயம்:


சமையலில் ரசத்தையும், சாம்பாரையும் மணக்க வைக்கும் பெருமை பெருங்காயத்தை தான் சேரும். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை  நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.  வாயுக்கோளாறை சரி செய்யும். தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி நீங்கும், வயிறு உப்புசம் போன்ற  தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.


கறிவேப்பிலை:

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. சர்க்கரை  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால் வலி கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்  கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு  வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கருத்துரையிடுக Disqus

 
Top