0

பச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான் சிறுவன். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார்.

அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினைக்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..

20 ரூபாய் கொடுத்து வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.


மொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..

படிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..

வறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.

இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்

கருத்துரையிடுக Disqus

 
Top