0

அதிக முதலீடு செய்து வாங்கும் கார்களை குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்வது மிக முக்கியம். காரில் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கும், நீண்ட ஆயுளை பெறுவதற்கும் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். அதேநேரத்தில், முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு பெரும்பாலும் இலவச சர்வீஸ் மூலமாக பிரச்னைகள் இருக்காது. ஆனால், அதன் பின்னர், கட்டண சர்வீஸ் முறை வரும்போது, எகிடுதகிடாக பில் வருவது அதிர்ச்சி தரும்.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில்தான் காரை சர்வீஸ் செய்ய வேண்டுமா அல்லது பிற தனியார் மெக்கானிக் ஷெட்டுகளில் காரை சர்வீஸ் செய்தால் பிரச்னைகள் வருமா என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


 
 
உங்களது கார் வாரண்டி காலத்தில் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திலேயே சர்வீஸ் செய்ய வேண்டும். வாரண்டி காலம் முடிந்த பின்னர்தான் பில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்போது நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தை தொடரலாமா அல்லது தனியார் மெக்கானிக்குகளை நாடுவது நலமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

 
 
பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் மையங்களில் மெக்கானிக்குகளுக்கு முறையான பயிற்சி அளித்த பின்னரே பணியில் சேர்க்கப்படுகின்றனர். மேலும், அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் சூப்பர்வைசர் கண்காணிப்பில் சர்வீஸ் செய்யப்படுவது சற்று ஆறுதல் தரும் விஷயம்.

 
 
ஆனால், பல சர்வீஸ் மையங்களில் போடாத உதிரிபாகத்திற்கும் பில் போடுவது வழக்கமாக உள்ளது. எனவே, கார் சர்வீஸ் செய்யப்பட்ட பின்னர், பில் போடப்பட்ட உதிரிபாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை தெரிந்தவர்கள் உதவியுடன் சரி பார்ப்பது பயன் தரும்.

 
 
அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் அவ்வப்போது நடத்தப்படும் இலவச கார் பரிசோதனை முகாம்களில் லேபர் கட்டணம் தள்ளுபடி மற்றும் உதிரிபாகங்களில் தள்ளுபடி வழங்குவதையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 
 
இலவச சர்வீஸ் இருக்கும் வரை ஓரளவு தாக்குப்பிடித்துக் கொள்ளலாம். கட்டண சர்வீஸ் என்று வரும்போது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் மிக அதிகப்படியான தொகையை வாடிக்கையாளர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சில வேளைகளில் உதிரிபாகத்தின் விலையை விட அதிக தொகை லேபர் சார்ஜ் என போடப்படுகிறது.

 
 
அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் வரிகள் மூலமாக பில் எகிறுகிறது. கிட்டத்தட்ட 25 சதவீதம் அளவுக்கு கூடுதல் தொகையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

 
 
சாதாரண மெக்கானிக் ஷெட்டுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. நன்கு வேலை தெரிந்த, நம்பகமான மெக்கானிக் ஷெட்டுகளில் கொடுக்கலாம். தவறில்லை. இதன்மூலமாக, கார் உதிரிபாகங்கள் விலைக்குண்டான தொகை மற்றும் லேபர் கட்டணம் போன்றவை மிக குறைவாக இருக்கும்.

 
 
அதேநேரத்தில், கண்ணுக்கு நேராகவே உதிரிபாகங்களை மாற்றுவதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கார் பற்றி தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் வசதியானது. அவர்களின் உதவியுடன் சிறந்த மெக்கானிக் ஷாப்புகளில் காரை சர்வீஸ் செய்யலாம்.

 
 
இப்போது, பிரபல நிறுவனங்களின் மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களும் சிறப்பான சேவையை தருகின்றன. ஆனால், அங்கும் அதிகப்படியான தொகையை செலுத்த நேரிடும் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கும், இந்த மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது.

கருத்துரையிடுக Disqus

 
Top