முதல் பார்வையில், இது ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷனில் வரும் காட்சி என்று நினைப்பீர்கள். அல்லது, பாதாள லோகம் என்றும் நினைக்கலாம். ஆனால், இது அப்படி எதுவுமல்ல. பாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்!


சுமார் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது நெருப்பு.
காரகும் பாலைவனத்தின் நடுவே உள்ளது இந்த துவாரம், மற்றொரு கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு வந்து இறங்கியதால் ஏற்பட்ட துவாரம் என்றுகூட சிலர் நம்புகிறார்கள்.

ஆனால், நிஜம் இப்படியான கற்பனை விவகாரம் எதுவுமல்ல. ஒருவகையில் சொல்லப்போனால், இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட துவாரம். இதன் பின்னணியில் சுவாரசியமாக கதை ஒன்றும் உள்ளது. அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க வாருங்கள், சொல்கிறோம்.

நாற்பது ஆண்டு காலமாக இங்கே இருப்பதால், அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, இந்த துவாரத்தின் பின்னணி தெரியவில்லை. அதுவே, இந்த துவாரம் பற்றிய கற்பனைக் கதைகள் பரவுவதற்கு காரணமாகி விட்டது.
தர்க்மெனிஸ்தானில், உள்ள டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ராட்சத துவாரம். லோக்கல் ஆட்கள் இதை, நரகத்தின் கதவு (The Door to Hell) என்று அழைக்கிறார்கள். அப்படிக் கேட்டால்தான், இடத்தை காட்டுகிறார்கள்.

சரி துவாரத்தின் நிஜ பின்னணி என்ன?
1971-ம் ஆண்டு, அந்த நாளைய சோவியத் யூனியன் எண்ணை அகழ்வாளர்கள், இந்த இடத்தில் நிலத்தடியே எரிபொருள் இருப்பதை தெரிந்துகொண்டு, அகழ்வுப் பணியை ஆரம்பித்தார்கள். பாலைவனப் பகுதியில், ராட்சத ஆழ்துளை எந்திரங்களை கொண்டுவந்து நிறுத்தி, ட்ரில்லிங் ஆரம்பித்தது.



இந்த இடத்தில் வந்தது, சிக்கல்!  இந்தப் பகுதி மணல், மிகவும் மிருதுவான தன்மை கொண்டது. ராட்சத ஆழ்துளை எந்திரங்களின் எடையை தாங்காமல், மண்சரிவு ஏற்பட, எந்திரங்களும் சரிந்து வீழ்ந்தன. அவற்றை மீண்டும் நிமிர்த்தி, தரையில் ஸ்ட்ராங்காக வைக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் செய்யப்பட்ட துவாரம், அதனுள் மண்சரிவால் ராட்சத எந்திரங்கள் வீழ்ந்த பள்ளம் எல்லாமாக சேர்ந்து, 70 மீட்டர் குறுக்களவுக்கு ஒரு துவாரத்தை ஏற்படுத்தி விட்டன. எரிவாயு எடுக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எந்திரங்கள் அகற்றப்பட்டன. முதலில் இங்குள்ள நிலத்தை கெட்டிப்படுத்திவிட்டு, திட்டம் மீண்டும் ஆரம்பிப்பது என முடிவாகியது.


ஆனால், மீண்டும் வேறு ஏற்பாடுகளுடன் வந்து சேர்வதற்குள், சோவியத் யூனியன் துண்டுதுண்டாக உடைந்து பல நாடுகளாகின. இந்த துவாரத்தை கவனிக்க யாருக்கும் ஆர்வம் இல்லை.
ஆரம்பத்தில் ரஷ்ய எண்ணை அகழ்வாளர்கள் கண்டுபிடித்தபடி, இந்தப் பகுதியில் நிலத்தடியே எரிவாயு இருப்பது நிஜம் என்பதால், நிலத்தடியே இருந்து, மிருதுவான மண் ஊடாக கசிந்து மேலே வரும் எரிவாயு, தீயை எரிய வைக்கிறது. இதுதான், விவகாரம்.
 

இப்போது திடீரென தர்க்மெனிஸ்தான் அரசு, இந்த துவாரம் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. காரணம், இதில் கொட்டக்கூடிய பணம் பற்றி இப்போதுதான் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
அந்த நாட்டின் தலைநகர் அஷ்காபத்தில் இருந்து இந்தப் பகுதி, 260 கி.மீ. வடக்கே டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது. டேர்வஸ் கிராமத்தின் ஜனத்தொகையே, 350 பேர்தான். இந்த துவாரத்தை மூடுவதற்கான திட்டம் ஒன்று தற்போது போடப்பட்டுள்ளது.






 
Top