0
புதுடெல்லி: தொழிலாளி இறந்தால் அவரது வாரிசுக்கு ஒரே வாரத்தில் பிஎப் செட்டில்மென்ட் வழங்கப்படும் என மத்திய பிஎப் ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார்.  தொழிலாளர்களின் பிஎப் கணக்குகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நிர்வகித்து வருகிறது.

தற்போது பிஎப் சந்தாதாரராக உள்ள தொழிலாளி மரணம் அடைந்தால், அவரது பிஎப் செட்டில்மென்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் பலன்களை அவரது குடும்பத்தினருக்கு அல்லது வாரிசுக்கு வழங்குவதற்கு 20 நாட்கள் ஆகிறது.

கடந்த வாரம் பிஎப் தொடர்பாக நடந்த ஆலோசனையின்போது, பிஎப் செட்டில்மென்ட் வழங்க இவ்வளவு நாள் தாமதம் ஆகக்கூடாது என்றும், குறிப்பாக தொழிலாளர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக செட்டில்மென்ட் கிடைக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இறந்த தொழிலாளியின் பிஎப் செட்டில்மென்ட் விஷயத்தில் தாமதம் கூடாது என மத்திய பிஎப் ஆணையர் வி.பி.ஜாய், மண்டல பிஎப் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

 தொழிலாளி மரணம் அடைந்த பிறகு அவரது மனைவி அல்லது வாரிசுதாரரால் சமர்ப்பிக்கப்படும் பிஎப் கோரிக்கைகளை, விண்ணப்பம் பெற்ற ஒரே வாரத்தில் பரிசீலித்து செட்டில்மென்ட் செய்ய வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தொழிலாளியின் கணக்கு உள்ள பிஎப் அலுவலகம் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, தொழிலாளியின் இறப்புக்கு பிறகு விண்ணப்பிக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.

‘‘தொழிலாளியின் இறப்புக்கு பிறகு வைக்கப்படும் கோரிக்கையாக இருந்தால் இங்கு அணுகவும்’’ என்று ஆங்கிலம், இந்தி அல்லது அந்தந்த பிராந்திய மொழியில், விண்ணப்பம் பெறும் கவுன்டரில் தெளிவான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  பிஎப் கோரிக்கைகள் தாமதமாவது குறித்து பேட்டியளித்த ஆணையர் ஜாய், ‘‘சில கோரிக்கை விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் வருகின்றன. இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. இருப்பினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம்’’ என்றார்.

கருத்துரையிடுக Disqus

 
Top