சிவனை எது இல்லையோ, அது என்ற அர்த்தத்தில் குறிப்பிடும்போதும், அல்லது ஆதியோகி என்று குறிப்பிடும்போதும் அவை ஒரு வகையில் ஒன்றுதான் என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட இரு கோணங்கள்.
இந்தியக் கலாசாரம் இவ்விரண்டு வாதங்களையுமே அரவணைப்பதால், இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் எளிதாக மாறிக் கொள்வோம். ஒரு கணத்தில் சிவனை பரந்து விரிந்த உண்மை என்ற அர்த்தத்தில் பேசுவோம், அடுத்த நொடியே அவர் யோக வழிமுறைகளை வழங்கிய ஆதியோகி என்ற அர்த்தத்தில் குறிப்பிடுவோம்.
துரதிர்ஷ்டவசமாக, பலருக்கு சிவன் அறிமுகமாவது இந்தியக் காலண்டர் வரைபடங்கள் மூலம்தான். அதில் சிவனைக் கொழு கொழு கன்னத்தோடு, நீல நிற மனிதராக வரைந்திருப்பார் ஓவியர். அவரிடம் ஒரேயொரு முகம் மட்டுமே இருக்கும் போலும். அவரிடம் கிருஷ்ணரின் வரைபடம் கேட்டால், அதே உருவத்தில் ஒரு புல்லாங்குழலை தீட்டித் தருவார். இராமரின் படம் கேட்டால் அதே முகத்தோடு, கையில் ஒரு வில்லை மட்டும் வரைந்து தருவார்.
பார்ப்பதற்கு வில்லன்போல் நீங்கள் இருந்தால், புகைப்படமும் அவ்வாறே வரும். அட! சிவனைப் போன்ற ஒரு யோகி ஏன் கொழு கொழுவென்று இருக்க வேண்டும்? அவரை எலும்பும் தோலுமாக, பட்டினி கிடப்பவராய் சித்தரித்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் கொழு கொழு சிவனை எப்படி ஏற்க முடியும்?
யோகக் கலாசாரத்தில், சிவனை கடவுளாகப் பார்க்க மாட்டார்கள். அவர் இப்பூமியில், இமாலய மலை அருகே வாழ்ந்த ஒரு மனிதர். யோகப் பாரம்பரியங்களை உருவாக்கியவர் என்ற முறையில், மனிதகுலத்தின் விழிப்புணர்வுநிலைக்கு அவரது பங்களிப்பு நிகரில்லாதது.
மதங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. இனி ஒன்று சேர்வதென்பது நடக்காத காரியம் என்பதுபோல், மனிதர்களை பிளவுபடுத்தி வைத்திருக்கும் இந்த வழிகளை மனிதர்கள் உருவாக்கும் முன்பே, மனித விழிப்புணர்வை மேம்படுத்தும் சக்திவாய்ந்த கருவிகள் உருவாக்கப்பட்டு, பூமியெங்கும் பரப்பப்பட்டன.
இந்த மனித யந்திரம், அதன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கு இருக்கக் கூடிய எல்லா வழிகளையுமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்துவிட்டார்கள். அதன் ஆழமும் நுணுக்கமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. "நம்முடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அப்படி என்ன நுண்ணறிவுடன் வாழ்ந்துவிட்டார்கள்?" என்ற கேள்வி அர்த்தமற்றது. காரணம், இது ஏதோ உயரிய சிந்தனையினாலோ, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினாலோ, நாகரிகத்தாலோ உருவானதல்ல, உள்நிலையில் பிறந்த ஞானத்தால் உருவானது.
அவரைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர் ஞான ஊற்றாகி, தன்னையே வெளிக் கொட்டினார். மிக விரிவாக, மனித யந்திரம் எப்படிப்பட்டது, மனித உடலினுடைய ஒவ்வொரு புள்ளியிலும் என்னவெல்லாம் செய்யமுடியும், அதனால் எவ்வெவ்வகையான சாத்தியங்கள் கிட்டும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்தார். அதில் இன்றளவிலும் எவ்வித திருத்தமும் செய்ய முடியாத அளவிற்கு, எதை எல்லாம் சொல்லமுடியுமோ, அவை எல்லாவற்றையும், அதை எவ்வளவு அழகாக எவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்த முடியுமோ, அப்படியே அவர் வெளிப்படுத்தி விட்டார்.
அதனை புரிந்து கொள்வதற்கு உங்கள் வாழ்நாள் போதாது. இந்த யோக விஞ்ஞானம், முதன்முதலில், இமாலய மலையின் கேதார்நாத் அருகே இருக்கும் பனிக்கட்டி ஏரி காந்தி சரோவரின் கரையோரத்தில் வழங்கப்பட்டது.
சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. இந்த விரதம் மிகவும் எளிமையானது; அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும்.
வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் சிக்கும் வரை காட்டிலேயே இருக்க முடிவெடுத்தான் வேடன். அதனால், ஒரு மரத்தின் மீதேறி, விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்தான். அவனது குடுவையில் சிறிது தண்ணீர் இருந்தது. அவனது அசைவில், அவ்வப்போது சிறிது கீழே கொட்டியது. அவன் அமர்ந்திருந்த மரத்தின் இலைகளும் உதிர்ந்து விழுந்தன.
விடிந்து விட்டது. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம்...அதன் மேல், குடுவையில் இருந்து கொட்டிய நீர் வழிந்திருந்தது. அவன் அமர்ந்திருந்த வில்வமரத்தின் இலைகள், லிங்கத்தின் முன் விழுந்து கிடந்தது. கருணை மிக்க சிவபெருமான், இந்த தற்செயல் நிகழ்வைக் கூட, தனக்கு நடந்த அபிஷேகமாகவும், பூஜையாகவும் எடுத்துக் கொண்டார். அந்த வேடன் மரத்தில் அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி. எனவே, அவன் மறுபிறவியில், குகன் என்னும், வேடுவ குலமன்னனாக பிறந்து புகழ் பெற்றான்.
இதனால் தான், சிவராத்திரியன்று கண்விழித்து, வில்வ இலை தூவி, அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டால், சகல பாக்கியங்களையும் அடையலாம் என்கின்றனர். அன்று, சிவன் கோவில்களில், நான்கு ஜாமகால பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரி அன்று, அதிகாலையில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று. 'நமசிவாய' அல்லது 'சிவாயநம' என, பஞ்சாட்சர மந்திரங்களை ஓத வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது; நோயாளிகள், முடியாதவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மாலையில், சிவாலயத்திற்கு வில்வ இலை கொண்டு செல்வதுடன், இரவு மற்றும் கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். மறுநாள் காலையில், அன்னதானம் செய்த பின், சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவனுக்கு பல வடிவங்கள் உண்டு. நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள், மனஅமைதியும், ஞானமும் பெறுவர். வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால், முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கி, தைரியம் உண்டாகும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராக துதித்தால், மனமகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால், வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நம் குலதெய்வத்தை மறந்து விடக் கூடாது. ஏனெனில், நம் முன்னோர் வழிவழியாக அந்த தெய்வத்தை நமக்கு அடையாளம் காட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். குலதெய்வத்தை வழிபட மிகச்சிறந்த நாள் மகாசிவராத்திரி. குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதற்கு முன், பக்தர்கள் காப்புக்கட்டி, மகா சிவராத்திரி அன்று, கோவிலுக்குச் சென்று, சிறப்பு பூஜை செய்வர். அன்றைய தினம் குடும்பத்திலுள்ள அத்தனை சகோதர, சகோதரிகளும் ஒன்றுகூடி, பூஜை செய்வர். இதனால், முன்னோரின் ஆசி கிடைக்கிறது. தற்காலத்தில், குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன. கூட்டுக் குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சிவராத்திரி நன்னாளிலாவது, நம் குடும்பத்தாருடன் குலதெய்வம் கோவிலுக்கும், சிவாலயங்களுக்கும் சென்று, குடும்ப ஒற்றுமைக்கு வித்திடுவோம்.
கருத்துரையிடுக Facebook Disqus